முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன்.


நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம்.


எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன்.


கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் போட்டு கணவனை வழி அனுப்பும் மனைவி, மனைவிக்கு வெளியில் இருந்து வரும்போது எதையாவது வாங்கி அதே டிஃபன் பாக்ஸில் கொண்டு வரும் கணவன் என அவர்களின் உலகத்தை பார்க்கவே பொறாமையாக இருக்கும். இது காதல் என்பீர்களா? இல்லை பிரிந்துவிட்டால் சமூகம் எதையாவது சொல்லிவிடும் என்ற பயம் என்பீர்களா?


சொல்லாக் காதலில் சுகம் மிக அதிகம் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது தவறாக கடத்தப்பட்டிருக்கிறது. சொல்லாக் காதல் என்று இங்கே குறிப்பிடப்படுவது, ஒரு தலைக்காதலா? அல்ல. சாப்பிட்டாயா? உறங்கினாயா? குளித்தாயா? பல் தேய்த்தாயா? என அப்டேட் கேட்டுக் கொண்டிருத்தல் அக்கறையின் வெளிப்பாடு, இதில் அன்பு இருக்கிறது என்று உருட்டுவார்கள் அதுவும் அல்ல. உண்மையில் சொல்லாக்காதல் என்பது, நான் என்ன நினைக்கிறேன் என அவளும், அவள் இதற்கு என்னவாக எதிர்வினையாற்றுவாள் என நானும், பரஸ்பரம் தெரிந்து வைத்திருக்கும் பெரும் புரிதல்தான் அந்த சொல்லாக் காதல். இது பல குடும்பங்களில் இருக்கும். குறிப்பாக காதல் திருமணமாக இல்லாத குடும்பங்களில். உங்கள் வீட்டில், உங்கள் பெற்றோரிடமே இதை நீங்கள் ஆயிரம் முறை பார்த்திருப்பீர்கள், கவனித்து இருக்க மாட்டீர்கள்.


பின், தியாக உணர்வு. நாம் எவ்வளவு முயன்றாலும் வரவே வராத ஒன்று. ஏனெனில் அது ஈகோவுடன் ஒரே ஒயரில் கனெக்ட் செய்யப்பட்ட வெடிகுண்டு. ஒன்றை நீ தியாகம் செய்துவிடு என சொன்னவுடன் ஈகோ வெடித்துவிடும். ஆனால் இந்த காதலில் அது அவ்வளவு அருமையாக செயல்படும். நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை நம் துணைவருக்காக விட்டுவிட தயாராக இருப்போம். சிகரெட்,சாராயம்,கஞ்சா என துவங்கி காதலி,கள்ளக்காதலி வரை இந்த பட்டியல் பெரியது. அத்தனையும் நமக்காக இருப்பவரின் மகிழ்ச்சிக்காக எனும் போதை அளப்பரியது.


பெண்கள் பக்கம் இருந்து சிந்தித்தால் அந்த தியாகம் இன்னமும் பெரியது. குடிகார கணவன் இருக்கும் குடும்பத்தில், அதே குடிகார கணவனுக்கு குடிக்கவும் பணம் கொடுத்து, பிள்ளைகளையும் வளர்த்து, வேலைக்கும் சென்று குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் மனைவிகள் நடுத்தர வர்க்கத்திற்கு கீழே இருக்கும் குடும்பங்களில் ஏராளம். கொஞ்சம் நடுத்தர வர்க்க குடும்பம் அல்லது அதற்கு மேலே இருப்பவர்கள் என்றால் உடனே விவாக ரத்து, மறுமணம் என கடந்து விடுவார்கள். ஆனால் இங்கே கதையே வேறு. அவர்களிடம் இருப்பது இரண்டே பதில்தான். ஒன்று, "அவர் ஒரு காலத்துல என்னய வச்சு கஞ்சி ஊத்துனாரு இப்ப நான் ஊத்துனா என்ன?" இரண்டாவது, "என்னைக்காவது இந்த மனுஷன் திருந்திடுவான்." இரண்டுமே காதல் அல்லாமல் வேறு என்ன?


உடலுறவு கொண்டே ஆகவேண்டும். இதனால் இரண்டு பலன்கள். ஒன்று விட்டுட்டு போக மாட்டாங்க. இரண்டாவது,"விட்டுட்டு போனாலும் நம்ம ஜாலியா இருந்துட்டோம்" என்பது இப்பொழுது பரவலாக பரவி வரும் விஷக்கருத்து. இதற்கு மட்டும் நான் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்காமல் ஒரு சிறிய எடுத்துக்காட்டை சொல்ல விரும்புகிறேன்.,


"கைகளை இருக்கப் பற்றிக்கொள்,  

காமம் தூண்டிடாத இடத்திலொரு முத்தமிடு,

என்னையறியாமல் கண்ணீர் வழிய வை,

சாவதைப்பற்றி நான் ஏன் யோசிக்கப்போகிறேன்." 10/07/2014 ல் சால்ட்&பெப்பர் தளபதி என்றொருவர் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதைவிடவா நான் புரிய வைக்க வேண்டும்?


நீ சொல்லுவது புனிதக் காதலாக இருக்கலாம். அப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை என்று சொல்லிவிடாதீர்கள். உங்கள் முன் உங்கள் பெற்றோர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெற்றோருக்கு இடையில் பிரச்சனை நீ சொல்வதெல்லாம் நான் கேள்விப் பட்டதே இல்லை எனில் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோரே இல்லை, இறந்து விட்டார்கள் (அ) என்னை பிறந்தவுடன் ஆசிரமத்தில் விட்டுவிட்டார்கள் என்றால் உலகின் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர் நீங்கள். உங்களுக்கான நபர், உலகின் மொத்த காதலையும் சுமந்து உங்களை தேடி வருவார். வரவே இல்லை எனில் நீங்கள்தான் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவன்.


- எழுத்தாளுமை இக்ரிஸ். (15/02/2025)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...