ஒவ்வொன்றிற்கும் ஒரு இஸம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு இஸத்திலோ அல்லது எதாவது ஒரு இஸ்ட்டாகவோ இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடவுள் பக்தி இருக்கிறது எனில் தீயிஸம், இல்லை எனில் ஏதீயிஸம், கும்பிடுவேன் ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் நியூட்ரலிஸம். இதில் குறிப்பாக நியூட்ரலிஸத்தில் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் தான் எந்த பக்கம் என்ற முடிவெடுக்கத் தெரியாமல் தடுமாறுபவர்கள்.
போலவே, பெரியாரிஸம், கம்யூனிஸம், மார்க்ஸிஸம், சேடிஸம் என ஏதோ ஒன்றை, ஒரு தத்துவத்தை, ஒரு தலைவனை, ஒரு கொள்கையை, பல நேரங்களில் நமக்கே தெரியாமல், புரியாமல், புரிந்துகொள்ள முயலாமல் நம்மை சுற்றி இருப்பவர்களோ அல்லது நாம் பரவலாக பார்ப்பதின் தாக்கமாகவோ நாம் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
நட்பு, காதல் என்ற உணர்வுகளில் துவங்கி வேலை, வாழ்க்கைமுறை என அனைத்திலும் இரண்டற கலந்து கிடக்கும் இந்த இஸங்களில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா? உண்டு! அதுதான் எஸ்கேப்பிஸம்.
இதை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது கேள்விப்படாமலும் இருந்திருக்கலாம். இந்த இரண்டு கூட்டத்தாருக்கும் நான் இதை சொல்லிவிட நினைப்பதும் ஒரு வகையில் எஸ்கேப்பிஸம்தான்.
நீர்போல இரு என புரூஸ்லீ சொல்லி இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆங்கிலத்தில்,"Be water my friend" என்று வரும். அதன் உள்ளர்த்தம்,"நீர் எந்த குடுவைக்குள் அடைக்கப்பட்டாலும், அந்த குடுவையின் உருவத்தை எடுத்துக்கொள்ளும். அதுபோல நீங்கள் இருங்கள்." என்பதுதான். உண்மையில் அப்படி இருப்பது பச்சை பச்சோந்தித்தனம்.
இதையே கொஞ்சம் மாற்றி சொன்னால் அதுதான் எஸ்கேப்பிஸம். நீரைப்போலத்தான் இருக்க வேண்டும். எங்கும் தேங்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அதுதான் எஸ்கேப்பிஸம்.
சுயநலம் பொதுநலம் என்ற எதுவும் இதில் இருக்காது. வெறுமனே எதிலும் தலையிடாமல், எது நம்மிடம் தலையிட்டாலும் அதிலிருந்து/அதை கடந்து சென்றுவிட வேண்டும். நாம் வெறுக்கும் மனிதர்களிடம் இருந்து விலகி இருக்க சில நேரங்களில் ஹெட்போன்/இயர்போன் பயன்படுத்துவோம். அதை எல்லா நேரமும் பயன்படுத்தினால் அதுவே எஸ்கேப்பிஸம்.
வேலை பார்க்கும் இடத்தில், படிக்கும் இடத்தில் இருக்கும் கோபத்தையும், வன்மத்தையும், நமக்குள் கால காலமாய் வேரூன்றிக் கிடக்கும் வன்முறையையும் வெளிக்காட்ட முடியாமல் நம் நண்பர்களிடமோ அல்லது காதலியிடமோ அல்லது மனைவியடமோ, இவர்கள் யாரும் இல்லையெனில் பெற்றோரிடமோ காண்பிப்பவர்கள் பலர் இருப்பார்கள். எவரையும் பாதிக்காமல் சிகரெட் அல்லது சாராயம் குடித்துவிட்டு,"அது வெறும் அந்த நேரத்து பிரச்சனை/அவமானம். நாளை சரியாகிவிடும்." என கடந்து செல்பவர்கள் வெகு சிலர். அவர்கள் அவர்களையே அறியாமல் எஸ்கேப்பிஸசத்தின் வாசலில் கதவைத் திறக்க யாராவது இருக்கிறார்களா என காத்திருப்பவர்கள். இவர்கள் இன்னும் மெருகேறி,"என்னமோ பண்ணுங்கடா. எனக்கென்ன வந்துச்சு?" எனும் நிலையை அடைதல், எஸ்கேப்பிஸம்.
பாடல் கேட்பது, சினிமா பார்ப்பது, புத்தகம் படிப்பது, பயணங்கள் செய்வது, கடவுள் பக்தியில் ஆழ்ந்து கிடப்பது, உடற்பயிற்சி நிலையம் செல்வது, போதைக்கு அடிமையாவது, இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடப்பது, இயந்திரத்தைப் போல யாரிடமும் பேசகூட நேரம் ஒதுக்காமல் வேலை செய்வது என மனிதர்களிடமிருந்து மட்டுமின்றி தனக்குள் இருக்கும் பெரும் வலியிலிருந்தும் விலக எத்தனிக்கும் அனைவரும் அவர்களுக்கே தெரியாமல் இந்த எஸ்கேப்பிஸத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன ஒன்று சரியான நெறிமுறையும், அதற்கான கோட்பாடும், தெளிந்த தத்துவமும், வழிநடத்தும் தலைவனும் இல்லா ஒரு இஸமாக இருப்பதுதான் இதன் ஆகப்பெரும் தோல்வி. ஆகப்பெரும் வெற்றியும் கூட.
இதற்கென நான் மேலே குறிப்பிட்ட மற்ற இஸங்களுக்கு இருக்கும் அத்தனையும் இருந்திருந்தால் இத்தனை பேரும் இத்தனை வருடமாக அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டார்கள். நான் இந்த இஸத்தை சார்ந்தவனல்ல என வெட்டி பெருமை பேசுவதற்காகவே வம்படியாக நியூட்ரலிஸவாதியாக மாறிப்போய் இருப்பார்கள். இதையே வெற்றி என்கிறேன்.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால், தன் மனத்திற்கு சந்தோஷத்தைத் தராத எதிலிருந்தும் விலகி ஓடுதல்தான் இதன் சாரம்சம். 1845 இல் பிறந்த லட்விக் -2 என்ற அரசன் இதில் தேர்ச்சி பெற்ற ஒருவர். அவரை அவர் காலத்தவர்கள் பைத்தியக்கார அரசன் என்றனர். இந்த காலத்தவர்களும் அப்படி சொன்னாலும், பரவாயில்லை என்கிறேன். நீங்கள் சொல்வதில் இருந்து எஸ்கேப்பிஸம் காப்பாற்றும்.
இன்றைய தேதிக்கு இந்த எஸ்கேப்பிஸத்திற்கு என எந்த ஒரு தலைவனும் இல்லை என்பதனாலும் இது நிச்சயமாய் நிலை நிறுத்தப்பட வேண்டிய ஒரு கொள்கை என்பதனாலும், இதற்கு நானே என்னை தலைவனாக அறிவித்துக் கொள்கிறேன். அதற்கான அத்தனை தகுதிகளும் என்னிடம் இருப்பதாக நான் உணர்கிறேன். போலவே இதுதான் எஸ்கேப்பிஸம் ஆகிற்றே! தலைவனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை எனில் அதிலிருந்தும் எஸ்கேப் ஆகிவிடுவேன்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (22/02/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக