முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடுமாற்றம்! • சீரற்ற சிந்தனைகள் - 1

என்னுடைய எழுத்துப் பயணத்தில், எத்தனையோ முறை எழுதுவதை நிறுத்தி இருக்கிறேன். மூன்று மாதம், ஆறு மாதம், சில நேரங்களில் வருடம்கூட தேவைப்படும், மீண்டும் எழுத துவங்க. ஆனால், இந்த முறை ஒன்றை எழுத துவங்கி, அதை பாதியில் நிறுத்தி, மீண்டும் அதை தொடரலாம் என நினைத்து, எழுத உட்காருகையில்.. வார்த்தைகள் கிடைக்காமல், அன்று நான் அதை எழுதுவதற்கான காரணமும், இன்று நான் தொடர்வதற்கான மனநிலையும் ஒன்றோடு ஒன்றிணையாமல், தடுமாறி, தடம் மாறி, ஆளரவமற்ற மயானமாய் உணர்கிறேன்.

இந்த தடுமாற்றம், தயக்கம், சிந்திக்கவியலா முட நிலை, ஏன்? எப்படி? எதற்காக? எது தடுக்கிறது? என்ற கேள்விகளை கடந்து.. இந்த நிலையை அப்படியே நிறுத்தி வை, தொடராதே! என்னும் பேராணை பிறப்பிக்கிறது மனது.

கிரகிக்க நினைக்கிறதா? அழிக்க துடிக்கிறதா? வானளாவிய எதிர்ப்புகளுக்கு கலங்காத திமிர் அடங்கிப் போகிறதா? தெரியாது. இருப்பினும், இருக்கிறேன் காத்து கொண்டு.

மீண்டும் பேனா எடுக்கும் தருவாயில், காகிதத்தில் வரைவது ஊதா மையாக இல்லாமல், கருஞ்சிவப்பு இரத்தமாக இருந்தால்.. காகித வாசனையும் இரத்த கெவுளும் சேர்ந்து நாசியை நடனமாட வைத்துவிடும்.

இருப்பினும், அந்த கேள்விக்கு எனக்கு விடை கிடைக்காமல் போகும் காரணம் என்ன? ஏன் என்னால் தொடர இயலவில்லை?

எப்பொழுதும் நான் எழுதும்பொழுது மனிதர்களிடமிருந்து விலகி இருப்பேன் அல்லது அவர்களை உதாசீனப்படுத்திவிடுவேன். வாழ்வில் எனக்கு இருக்கும் வெகு சில பேரானந்தத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எழுத்து வேலையில் இன்னொருவரின் தலையிடலை நான் பெரியதாக விரும்புவதில்லை. நான் ஒன்றை சிந்தித்து, அதை மெருகேற்றி, தீட்டிக் கொண்டிருக்கையில் அவன்/அவள், அவர்தம் வாழ்வில் நடந்து ஏதாவதொன்றை என்னிடம் பகிர்கையில், நான் என்ன எழுத வேண்டுமோ அதிலிருந்து பிரண்டு விடுவேன்.

இப்பொழுது பெருமளவில் மனிதர்களுடன் நேரம் ஒதுக்குவது காரணமாக இருக்குமா? அல்லது அதே மனிதர்களிடம் மீண்டும் மீண்டும் பேசுவதா? கேட்க புது கதைகள் இல்லாமல் போவதா? பேச புது விசயங்கள் இல்லாமல் தவிப்பதா? அல்லது எனது சுதந்திரம் என்னுடைய எழுத்துக்களாலேயே பறிக்கப்படுகிறதா? என்ன என்று தெளிவாக தெரியவில்லை. அல்லது தெரிந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறதோ என்னமோ?

சில மாதங்களுக்கு முன், சரியாக கடந்த 2024 திசம்பர் மாதத்திற்கு முன் வரை நான் வெறும் பார்வையாளன்தான். அந்த நேரத்தில், பல படைப்பாளர்களிடம் பேச முயன்று தோற்று போய் இருக்கிறேன். ஆனால் அவர்கள் ஏன் பேசவில்லை என்பதை நான் ஓர் படைப்பாளனாக உருப்பெற்ற பின் உணர்கிறேன். நேரம்! பெரும் வரம். ஆனால் அன்றைய தேதியில் என்னுடைய எண்ண ஓட்டம் என்னவாக இருந்தது எனில், "நான் ஓர் படைப்பாளனாக மாறிவிட்டால் குறிப்பாக வெற்றிபெற்ற படைப்பாளனாக, இப்பொழுது இருப்பதைப் போல மாறிவிட்டால், நான் அப்பொழுது எனக்கு வரும் எந்த மெசேஜ்களையும் முடிந்த அளவிற்கு தவிர்த்துவிடக்கூடாது" என்பதுதான் அது. அது ஒருவேளை தவறாக இருக்குமோ என்ற எண்ணம் என்னிடத்தில் உதயமாவது பெரும் வருத்தம்.

எனக்கு மனிதர்களை சந்திப்பது பிடிக்கும். அவர்களுடனான உரையாடல் பிடிக்கும். ஆனால் அவர்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பது ஏதோ ஒரு இடத்தில் விலகிச் சென்றுவிட்டால் பரவாயில்லை என சிந்திக்க வைக்கிறது. இது எதும் வியாதியா? அல்லது நான் இப்படித்தான் இருந்தேனா? அல்லது படைப்பாளனின் மனநிலையா? இது என்னவாக இருக்கும் என்பதற்கு கூகிளில் கேட்டால் மனநல மருத்துவமனைக்கு செல் என பதில் வரும். உண்மையில் மனநிலையில்தான் மாற்றம் ஏற்படுகிறதா? 

எப்பொழுதும் இருந்த ஒன்று இப்படித்தான் இருக்கும் என இருந்த ஒன்றில் ஏதேனும் சிறிது மாற்றத்தை பார்க்கையில், அதன் தாக்கம் நமக்குள் பீறிடும். அந்த பீறிடலின் வெளிப்பாடுதான் இந்த மாற்றமா? தெரியவில்லை. இது ஒரு புறமிருக்க.,

நான் ஒன்றை பார்த்து, நினைத்து, அதன் தாக்கத்தில் ஒன்றை எழுத துவங்கி, எதற்கென தெரியாமல் அதை பாதியில் நிறுத்தி, மீண்டும் அதை துவங்குகையில் எதற்கு வேறொரு கண்ணோட்டம் வர வேண்டும்? அப்படி புதுக் கண்ணோட்டம் வருகிறதெனில் முன்னால் இருந்த கண்ணோட்டத்தின் நிலை என்ன? அப்பொழுது இருந்த நிலைப்பாடு என்ன? நிலைப்பாடுகள் மாறுகின்றனவா? அல்லது கண்ணோட்ட மாற்றத்தின் தாக்கமா? இதை எப்படி சரிவர புரிந்து கொள்வது? அப்படி புரிந்து கொண்டாலும், விடை கிடைத்தாலும், முன்னொரு முறை நான் எழுதியதற்கும் இப்பொழுது எழுத நினைப்பதற்குமான இந்த கால இடைவெளியில் ஏற்பட்ட மிகத்துல்லியமான மாற்றம்தான் என்ன? அப்படி மாறினாலும் சரியாக நான் எதை எனக்கானதாக அல்லது நான் சொல்ல விரும்புவதாக அல்லது நான் புரிந்துகொள்வதாக ஏற்றுக் கொள்வது? தெரியவில்லை.

இது வெறும் ஓவர்திங்கிங் என கடந்துவிட முடியாது. தற்கொலை செய்ய நினைப்பதற்கும், அதிலிருந்து வெளியே வருவதற்கும், மீண்டும் வாழ்வை வாழ்வதற்கும் அல்லது இறந்தே போவதற்கும் இதுபோன்ற சிற்சில மனநிலை மாற்றங்கள்தான் பெரும் காரணமாக அமைந்திருக்கின்றன. எவனையும் எதிர்க்கலாம் என்பதற்கும் எமனிடம் செல்லலாம் என்பதற்குமான இடைவெளி மிகச்சிறியது.

- எழுத்தாளுமை இக்ரிஸ் (14/04/2025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பகவத் கீதை - சர்ச்சையும் விளக்கமும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பகவத் கீதையில் சொல்லப்பட்ட,"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வசனத்தை மேற்கோளிட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலவே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதைப்பற்றிய ஒரு விரிவு பார்வைதான் இந்த பதிவு. முதலில் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது மாபெரும் மூடத்தனம். இங்கு கடமை என்பதை நாம் பல விதத்தில் பொருத்தலாம். எதாவது ஒரு உறவின் வாயிலாகவோ அல்லது பிறருக்கும் செய்யும் உதவி வாயிலாகவே அல்லது தொழில்/வேலை ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் கடமை என்பதை பொருத்தலாம். இதில் எதிலும் நமக்கு யாதொரு பலனும் இல்லை என்றால் அதை எப்படி செய்வீர்கள்? உதாரணமாக, கோவிலுக்கு செல்வது புண்ணியம் அல்லது நினைத்தது நடக்கும் அல்லது சொர்க்கத்திற்கு செல்வோம் என்றொரு மூடநம்பிக்கை இல்லை எனில் இந்தியாவில் கோவில்களே இருக்காது. கோவிலுக்கு செல்வது தீங்கானது, சுடுகாட்டை பார்ப்பது போன்றது, பூனை குறுக்கே செல்வது போன்றது என சொல்லப்பட்டிருந்தால் கோவில்கள் என்ற அமைப்புகள் இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்காது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலும், பிரி...

என் பார்வையில் காதல்

எது காதல்? எப்படி காதல்? நீ என்ன புரிந்து வைத்து இருக்கிறாய் காதலைப் பற்றி? உனக்கு என்ன தெரியும் காதலைப்பற்றி? என்றெல்லாம் பல கேள்விகளை சுமந்தபடி, இந்த பதிவை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நான் இன்றைய தேதியில் பார்த்த வகையில், இவர்களுக்கு காதல் என்பது ஒரு பொழுதுபோக்காகவும், தனிமையில் இருந்து தப்பிக்க உதவும் ஒரு வழியாகவும் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ஓல்ட் சோல். நான் பார்த்த, நான் பழகிய, நான் கண்டு வியந்த பெரும் காதல்கள் ஏராளம். எ.கா., ஓகே கண்மணி திரைப்படத்தில் எல்லோரும் துல்கர்-நித்யா மேனன் ஜோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பிரகாஷ்ராஜ்-லீலா சாம்சன் ஜோடியை -தனியாக, மனதார, எவ்வித நெருடலுமின்றி- கொண்டாடிக் கொண்டிருந்தேன். கவனித்ததுண்டா? வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் ஆயிரம் முறை ஐ லவ் யூ சொல்லுவதை? மணிக்கொருமுறை ஒருமுறை மிஸ் யூ சொல்லுவதை? நிமிடத்திற்கு நிமிடம் முத்தங்கள் கொடுப்பதை? இது எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் பிறர் கண்ணில் படும்படி நடக்காது. ஆயிரம் சண்டை, லட்சம் மனஸ்தாபம், கோடி முறை பிரிந்துவிடலாம் என்ற கோபம் இருந்திருக்கும். ஆனால் காலை உணவை டிஃபன் பாக்ஸில் ...

சரியா? (2017 பதிவுகள்)

தலைக்கவசம் அணியுங்கள் என விளம்பரம் செய்யும் அரசு வாகனத்தை சரியாக ஓட்டுங்கள் என்றோ பொறுமையை கையாளுங்கள் என்றோ விளம்பரப்படுத்தாதது சரியா? வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் குப்பையை வெளியே போட வேண்டும் என சொல்பவர்கள் அதை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என சொல்லாதது சரியா? பெண்களின் உடையிலும் நடையிலும் நடத்தையிலும் குறை சொல்பவர்கள் தத்தம் மகன்களை சரியாக வளர்க்காதது சரியா? சாதி என்பது தீண்டாமை என தெரிந்தும் சாதி பார்ப்பதில்லை என பெருமை பேசுபவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவது சரியா? இலவசங்களும் பணமும் வெற்று சலுகைகளும் கொடுத்து நம்மை முட்டாள் ஆக்குக்கிறார்கள் என தெரிந்தும் ஆக்குபவனையே ஆள அனுமதிப்பது சரியா? ஊழல் லஞ்சம் என அரசு அலுவலகங்கள் சாக்கடையாய் இருந்தாலும் அதில் நம் வேலை நடக்க பணத்தை கொட்டுவது சரியா? பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான எதுவும் இல்லாமல் அசோகர் மரம் நட்டதையும் சோழர்கள் கோவில் கட்டியதையும் பாண்டியர்கள் தமிழை வளர்ததையும் சொல்லித் தருவது சரியா? பள்ளி கடந்து கல்லூரி வந்ததும் என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் வேலை கொடுப்பவனிடம் எப்படி நடந்து கொள்வது என வேலைக்காரர்களை உருவாக்கும் பட்...