உங்களுக்கு தெரிந்து சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் சென்றிருந்தேன். தனுஷ்கோடி செல்ல வேண்டிய நான் மனது மாறி திருச்செந்தூர் சென்றது அதனால் ஏற்பட்ட கலவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு 15 நாட்களுக்குமுன் ஓசூர். அதுவும் ஒரு சர்ச்சையானதை நீவிர் அறிவீர்.
சர்ச்சைகளை விலக்கி வைத்து பார்த்தால் இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது நானோர் ஊரோடி. பயணம் செய்வது என்னுடைய பல பொழுதுபோக்குகளில் ஒன்று. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட என் மனநலத்திற்கான சிகிச்சை எனலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல், ஒரு தேவை, ஒரு தப்பிக்கும் வழி தேவைப்படும். அதைப்பற்றி, எஸ்கேப்பிஸம் என்ற ப்ளாக் பதிவில் விளாவரியாக எழுதி இருப்பேன். என்னை ஒப்பிட்டு சொல்லுவோமேயானால்.,
எனக்கு சினிமா, புத்தகம், பாடல், அனிமே, வெப் சீரிஸ், டிவி சீரிஸ், மாங்கா, காமிக்ஸ், சில நேரங்களில் அரசியல், பயணம், வெற்று உரையாடல்கள், மது அருந்துதல் என எக்கச்சக்க தப்பிக்கும் வழிகளை வைத்திருக்கிறேன். இத்தனையும் வைத்திருக்கிறாயே? எப்படி வாழ்க்கையை வாழுகிறாய் என நீங்கள் கேட்கலாம். வாழ்க்கையே வேண்டாம் என்றுதானே இத்தனையும். வாழ்க்கையை பற்றி கூடிய விரைவில் ஒரு ப்ளாக் பதிவு வரும்.
எதற்கு இத்தனையும் என கேட்டீர்கள் எனில் என்னை பொறுத்தவரையில் மனித மூளைக்கு ஏதாவது வேலை கொடுக்காமல் விட்டுவிட்டால் ஒன்று யார் உணவில் மண்ணள்ளி கொட்டலாம் என்றோ அல்லது நம் தலையில் நாமே எப்படி மண்ணள்ளி கொட்டிக் கொள்வது எப்படி என்றோ சிந்திக்க ஆரம்பித்துவிடும். எனவே, அதை பரபரப்பாகவே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஒட்டுமொத்த தப்பிக்கும் வழிகளுக்கும் ஒரே நோக்கம்தான். இருக்கும் நிஜ வாழ்வில் இருந்து ஓடிவிட வேண்டும். ஒன்று உடலளவில் அல்லது மனதளவில். மற்றதெல்லாம் மனதளவில் மட்டுமே செயல்படும் பொழுது, பயணம் மட்டும் உடலளவிலும் மனதளவிலும் செயல்படும்.
அதிகம் தேவையில்லை. கோபம் வந்துவிட்டால் இரு சக்கர வாகனத்தை எடுத்தகொண்டு 5 கி.மீ தூரத்தை கடந்துவிட்டால், கடந்த தூரத்தில் இருந்து சிந்தித்து பார்த்தால் எதற்கு கோவப்பட்டோம் என்பதே மறந்து போய் இருக்கும். கோபம் மட்டுமல்ல, மனவருத்தம், சோகம், டிப்ரஷன் இன்னும் என்னனென்ன நம் மனதை புண்படுத்துபவையாக இருக்கிறதோ அத்தனைக்கும் இந்த பயணம் எனக்கு தெரிந்த வகையில் பெரும் எஸ்கேப்.
பல நேரங்களில் என்னை சுற்றி இருக்கும் மனிதர்களிடம், அவர்களின் சிற்சில நடவடிக்கைகள்கூட எனக்கு வெறுப்பை தந்துவிடும். ஆனால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. உதாரணமாக, நன்றாக பேசிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென முகத்தை திருப்புவார். அங்கே என் தவறு என்ன? அவரின் கோவம் என்ன? என சிந்திக்க ஆரம்பித்தால் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த மனித இனத்திடமிருந்து விலகிவிடலாம் எனத் தோன்றும். இன்னும் சற்று நேரம் கடந்தால்.. நான் ஏன் விலக வேண்டும் இவர்கள் இருப்பதால்தானே பிரச்சனை இவர்களை கொன்றுவிட்டால் என்ன எனத் தோன்றும். இவர்களிடமிருந்து என்னை அல்ல, என்னிடமிருந்து அவர்களை காப்பாற்ற இந்த பயணம் பேருதவி.
பல நேரங்களில் வெறுமனே வெற்று வானத்தை வெறித்தபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருப்பேன். நேரம் காலமெல்லாம் கணக்கில் இல்லை. எனக்கு அந்த மனஸ்தாபத்தையும் கோவத்தையும் கிரகிக்க வேண்டும், அதுவரை. பல நேரங்களில் பாடல்களை ஒலிக்க விட்டபடி சத்தமாக பாடிக்கொண்டே செல்வேன். பல நேரங்களில் யாரிடமாவது அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வேன். பல நேரங்களில் கார்களை விரட்டிக் கொண்டு, லாரிகளை முந்திக்கொண்டு, சக பயணிக்கு வழிவிடாமல் வளைந்து வளைந்து என அந்த நேர மனநிலையை வெளிப்படுத்தி விடுவேன்.
சில நேரங்களில் மட்டும் எதுவும் செய்யாமல் பேரமைதியாக வாகனத்தை செலுத்துவேன். அப்படி பயணிக்க துவங்கிவிட்டால் அது நெடுந்தூர பயணமாக அமைந்துவிடும். ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் 50 கி.மீ வேகத்தை தாண்டாமல் கிட்டத்தட்ட ஒரு முதிர்ச்சி நிலையில், தியான நிலையில் பயணிப்பேன். புட்டத்தில் ஏற்படும் வலிகூட மூளைக்கு எட்டாமல் மரத்துப் போயிருக்கும். இந்த உலகத்திற்கும் எனக்குமான பந்தம் மொத்தமும் அறுந்து போய்விட்டதாய், முடிவிலியாம் பேரண்டத்தின் ஏதோ ஓர் முலையில் நான் தொலைந்து போய்விட்டதாய் ஓர் எண்ணம். உடலும் மனமும் எதையும் சிந்தியாமல், சிந்திக்க அறிவு இடம் கொடாமல் நிலை நிறுத்தும் அந்த பயணத் தருணத்தை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.
நான் சென்று சேரும் இடத்தில் இருக்கும் புதுமைகள், புதுமைகள் இல்லை. நான் அங்கே சந்திக்கும் மனிதர்கள், மனிதர்கள் இல்லை. என் நினைவில் எப்பொழுதும் மணம் மாறாமல் தங்கிக் கிடப்பது நான் எங்கு சென்றாலும் அங்கே செல்லும்வரை நான் செய்த பயணம் மட்டுமே. அது ஓர் பெரும் கிளர்ச்சி!
இன்னும் சில, வெகு சில நேரங்களில் மட்டும் மேலே குறிப்பிட்ட எதற்கும் எவ்வித சம்மந்தமும் இன்றி எதாவது கதைகள் சிந்தித்துக் கொண்டே செல்வேன். என்னுடைய முதல் புத்தகத்தை ஒரு பயணத்தில் சிந்தித்தேன் என சொன்னால் அது மிகையாகாது. நான் எந்த மாதிரியான எழுத்தாளன் எனில், நான் சிந்திக்கும்பொழுதே அது முடிவுக்கு வந்துவிடும். அதற்குப்பின் அதில் யாதொரு மாற்றமும் செய்ய மாட்டேன். ரஃப் காப்பி, ட்ராஃப்ட், பைனல் காப்பி என்றெல்லாம் எனக்கு எதுவும் இல்லை. சிந்திப்பேன், எழுதுவேன், பிழைகளை மட்டும் திருத்துவேன், அவ்வளவுதான். அந்த அளவு ஓவர்திங்கிங் வியாதி உள்ள ஒருவன் நான். இப்படியும் ஒருவன் இருக்கிறானா என நீங்கள் தெரிந்துகொண்டு அதை கடைபிடிக்க நினைக்காதீர்கள். என்னைப்போல ஒருவனாக வாழ்வது கடினம். வாழ்வில் இருந்து ஓடிக் கொண்டே இருப்பது வாழ்வில்லை, அது நரகம்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (17/05/2025)
கருத்துகள்
கருத்துரையிடுக