சில மாதங்களுக்கு முன், ஒரு தேநீர் விடுதியில் காபி குடிக்கலாம் என சென்றேன். நானோர் ஆகப்பெரும் காபி விரும்பி. இன்னும் சரியாக சொல்லப்போனால் காபி வாங்கி தருகிறேன் என சொல்லி என்னை கடத்தி கொண்டு சென்றுவிடலாம்.
எப்பொழுதும் நெரிசலாக இருக்கும் அந்த தேநீர் விடுதி, அன்று என்னமோ காற்றாடிக் கிடந்தது. எல்லா நேரமும் கூட்டம் இருக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இருக்க தேவையில்லை எனினும் திடீரென கூட்டம் இல்லாமல் இருப்பது சற்றே நெருடலாக இருந்ததை நான் மறுக்க விரும்பவில்லை.
காபி போட சொல்லிவிட்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன். எனக்கு சில வித்தியாசமான பழக்கங்கள் உள்ளது. சிகரெட் இல்லாமல் காபி இறங்காது, காபி இல்லாமல் சிகரெட்டை தொடமாட்டேன். என்னை பின் தொடர வேண்டாம். அது பெரும் பாதிப்பு. ஏனெனில் சிகரெட் புகைக்கும்பொழுது நம் தொண்டைக்குள் இருக்கும் நுண்ணிய நரம்புகளும், எதிர்ப்பு சக்தியை தரும் உயிரிகளும் இந்த புகையின் தாக்கத்தால் சுருங்கி ஒடுங்கி போய் இருக்கும். புகை பிடித்து முடித்த பின் குளிர்ந்த நீர் ஒரு குவளை குடித்து, அதற்கு பின் நான்கைந்து நிமிடங்கள் கழித்துதான் சூடான காபியை குடிக்க வேண்டும். இது உடல் அறிவியல். மருத்துவர்களும் இதைத்தான் பரிந்துரைப்பனர். ஆனால் நான் அதை கண்டுகொள்ள மாட்டேன். என் உடல் எவ்வளவு தாங்கும் என்பதை அறிந்துகொள்ளும் பேரவா என்னுடையது.
இரண்டாவது பழக்கம் பற்ற வைத்தவுடன் இழுத்த முதல் புகையை, பலர் உள்ளே இழுக்க மாட்டார்கள். நான் இழுப்பேன்.
அப்படி இழுத்து, திரும்பி ஊத முற்படும்பொழுது அந்த தேநீர் விடுதிக்கு எதிரே உட்கார்ந்து இருந்த பெரியவர் ஒருவர் என்னை அழைத்தார். அவர் அழைக்கும்வரை, அங்கே அவர் உட்கார்ந்து இருந்ததை நான் கவனிக்கவில்லை. சென்றேன்.
(பேச்சுவழக்கில்.)
"என்ன வேணும் பெர்சு?" நான்.
"டீ வாங்கிட்டு வா" அவர்.
"எதே? வாங்கிட்டு வரணுமா? காசு தர்ரேன். போய் வாங்கிக்க. வேற எதுனா வேணும்னாலும் வாங்கிக்க." நான்.
"அதெல்லாம் ஒன்னும் வேணா. டீ மட்டும் வாங்கினு வா" அவர்.
மறுக்க மனமில்லாமல், இதனால் என் கிரீடம் கீழே விழுந்துவிடப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தபின், அவருக்கு தேநீர் ஒன்று சொன்னேன். அதற்குள் சிறிது கூட்டம் சேர்ந்துவிட்டது. தேநீர் கடைக்காரர் காத்திருக்க சொன்னார். அதற்குள் எனக்கு காபி தயாராகி இருந்தது. குடித்துவிட்டு சிகரெட்டையும் புகைத்து முடித்து சிகரெட்டை விரல்களில் பிடித்தபடி நெருப்பு கங்கை மட்டும் தரையில் தேய்த்து நெருப்பை அணைத்துவிட்டு தேநீரை வாங்கிக்கொண்டு அந்த பெரியவரின் அருகே சென்றேன்.
அதை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர், "ஏன் சிகரெட்ட கால்ல போட்டு மிதிக்க மாட்டியா?" என்றார்.
"பஞ்ச பூதங்கள்ல பெரிய சக்தி இந்த நெருப்பு. அத அவமரியாத பண்றமாரி இருக்கும்னுதான் நான் கால்ல போட்டு மிதிக்க மாட்டேன்" என்றேன்.
"கடவுள் பக்தியா" அவர்.
"நெருப்ப கடவுளா நினைக்கல. ஆனா அது நம்மள மீறுன ஒரு சக்தி. நமக்கு உதவியா இருக்க ஒரு சக்தி. அத மதிக்கலைன்னாலும் அவமரியாத பண்ணகூடாது" நான்.
"ஆனா அது நெருப்ப இல்லைல்ல? வெறும் கங்குதானே?" அவர்.
"நெருப்போட கங்குதானே? வெறுமனே கங்குன்னு ஒன்னு உருவாகிடாதுல்ல?" நான்.
"ம்ம் நீ சொல்றதும் சரியாட்டந்தான் இருக்கு. இனி நானும் கால்ல மிதிக்க மாட்டேன்" என்றார்.
"ஓ! நீ சிகரெட்லாம் அடிக்கறியா? டீக்கே வழியில்லாம பிச்ச எடுத்துட்டு இருக்கமாரி இருக்கு" நான்.
"ஏன்? பிச்ச எடுத்தா சிகரெட் அடிக்க கூடாதுன்னு இருக்கா? நானும் அடிப்பேன். ஃப்ளேக்கு. அஞ்சு ரூவாதான். நீ அடிச்ச சிகரெட்ட வுட நல்லாருக்கும்" அவர்.
"வாங்கித்தரவா?" எனக் கேட்டேன்.
"அதெல்லாம் இருக்கு" என்றபடி சட்டைப்பையில் தேடி துலாவி, பாதி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.
அதை பார்த்துக்கொண்டிருந்த நான்,"சரி நீ டி குடி. சிகரெட் வேணும்னா சொல்லு, வாங்கித் தரேன். இருந்த அர சிகரெட்டயும் பத்த வச்சுட்ட.. அப்பறமா அடிக்க என்ன பண்ணுவ?" என்றேன்.
"அத அப்போதைக்கு பாத்துக்கலாம். இப்ப அடிக்க சிகரெட்டும், குடிக்க டீயும் இருக்கு அது போதும்" என்றார்.
"சரி பெர்சு நா கெளம்பறேன். டீக்கு காசு குடுத்துட்டேன். வரட்டுமா?" என்றேன்.
"இரு! இரு! எங்க போற? உங்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றார்.
எனக்கு இருக்கும் ஒரு சூப்பர் பவர் என சொல்லலாம் இதை. என்னை பார்த்த மாத்திரத்தில் என்னிடம் பலர் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சோகங்களை என்னிடம் சொல்லி ஆற்றிவிடுவர். நானும் சலிக்காமல் கேட்பேன். மனிதர்களிடம் உரையாடுதலை விடவா ஆகப்பெரும் அனுபவத்தை இந்த வாழ்க்கை தந்துவிடும்?
"சரி சொல்லு பெர்சு" என்றேன்.
அது ஒரு பெரும் கதை. சுருக்கமாக சொல்கிறேன். உங்களுக்கு படிக்க சுலபமாக இருக்கும்.
அவர் ஒரு ஓட்டுநர். ஒரு முக்கியான அரசியல் புள்ளிக்கு தனிப்பட்ட ஓட்டுநராக இருந்திருக்கிறார். அந்த அரசியல்வாதி தற்பொழுது உயிருடன் இல்லை. அந்த அரசியல்வாதிக்காக இவர் போகாத ஊரில்லை, சுற்றாத நாடில்லை. அவ்வளவு அலைந்து திரிந்து ஓடி ஒடி சம்பாதித்து ஒரு திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள். ஒருவனை அரசு ஓட்டுநராக்கி விட்டார். இன்னொருவனை அரசு பள்ளி ஆசிரியராக்கிவிட்டார். இரண்டு வீடுகள் கட்டி இருந்திருக்கிறார். மூன்றாவதாக ஒரு வீடு கட்டிக்கொண்டிருந்த பொழுது அந்த அரசியல்வாதி இறந்துபோக, அந்த வீட்டின் வேலை பாதியில் தடைபட்டது. அதுவரை சேர்த்து வைத்திருந்த பணம் நகைகள் அனைத்தையும் வைத்து, வீட்டை கட்டி, படாத பாடு பட்டிருக்கிறார். கடைசியில் அவரது மனைவி மக்களே அவரிடமிருந்து அனைத்தையும் வாங்கிக்கொண்டு அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டனராம். வாட்ச்மேன் வேலைக்குகூட போக முடியவில்லை, வயதாகிவிட்டது என புலம்பினார்.
அத்தனையையும் தாண்டி எல்லாம் என் குடும்பத்துக்கும் என் பசங்களுக்குதானே என்று சொன்ன பொழுது அவ்வளவு பெருமிதம் அவரது முகத்தில். ஆனால், கடைசியாக பேரக்குழந்தைகளை பார்க்க கூட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லும்பொழுது அழுதே விட்டார். உறைந்துபோய் அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று.
அதிகபட்சம் ஒருவேளை உணவு, படுத்துக்கொள்ள திண்ணையில் ஒரு இடம் கொடுத்தால் என்ன குறைந்துபோய் விடுவார்கள் என்ற ஆத்திரம் வந்தது. இதை சிந்திக்கும்பொழுது இதேபோல எத்தனை எத்தனை முதியவர்கள் சாலையோரங்களில், முதியோர் இல்லங்களில், ஆலய வாசல்களில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பமும் இப்படித்தான் செய்திருக்கும் என்ற ஆதங்கம்.
குழந்தையாக இருக்கும்பொழுது அப்படி பார்த்து கொண்டிருந்த உங்கள் பெற்றோர்களை, இப்படி தெருவில் விட எப்படி மனது வந்திருக்கும்? கல் நெஞ்சம் என்றுகூட சொல்லிவிட முடியாது கல்லில்கூட ஈரம் இருக்கும். இவர்கள் அதைவிட குரூரமானவர்கள்.
வெறும் பணமும், சொத்தும்தான் முக்கியமாக போய்விட்டதா? அப்படி வேண்டும் எனினும் பெற்றோர்களை தெருவில் விட என்ன தேவை இருக்கிறது? அவர்கள் அப்படி நினைத்திருந்தால் நீங்கள் இப்படி வளர்ந்து வந்து அவர்களின் காலை வாரி இருக்க மாட்டீர்கள் அல்லவா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்றோர் பழமொழி உண்டு. இவர்களுக்கு எதுவும் ஆடவில்லை என்பதுதான் பெரும் வேதனை.
எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்த பின் அவர் என்னிடம் கடைசியாக கூறியது,"வேலன்னு வந்து, காரெடுத்தன்னா மும்பை போய் அங்கருந்து பேங்களூரு போய் அங்கருந்து தூத்துகுடி போயின்னு ரெண்டு மூனு நா ராப்பவலா சுத்துன ஒடம்பு இது. இன்னைக்கு என்னால சேந்தாப்ல பத்தடி எடுத்து வைக்க முடியல." என்று முடித்தார்.
ஒட்டுமொத்த மனித வாழ்வின் சாரம்சமும் அவரின் இந்த கடைசி வார்த்தைகளில் அடங்கி நின்றதாக உணர்ந்தேன்.
நான் சந்தித்த மனிதர்கள், அதி அற்புதமானவர்கள்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (08/03/2025)
❤️
பதிலளிநீக்குபதிவும் அற்புதம் நன்றி
பதிலளிநீக்குநல்லது ❤️
பதிலளிநீக்குஅருமை❤️
பதிலளிநீக்கு